சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

January 2, 2010

கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்- காளமேகப் புலவர்

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 12:26 pm

யாவர்க்கும் ரஞ்சனை செய்து, யாவர்க்கும் அவ்வவராய்
பாவனையாய், தீது அகலக் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி, ஏற்ற ரசத்தால்
சதிருறறால், ஆடி அரசாம்

கண்ணாடி:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து- அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கி
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் – யாருக்கும் அவரவர்களாகவே தெரிந்து
தீது அகலக் பார்த்தலால் – தீமை இல்லாது மங்கலப் பொருளாகப் பார்ப்பதால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி – தன்னை பார்க்கும் எதிர் நிற்பவரை தன்னுள் ஆக்கிக் கொண்டு காட்டி
ஏற்ற ரசத்தால் சதிருறறால – தன் பின்னே ஏற்றப் பட்டிருக்கும் ரசத்தால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் – கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

அரசன்:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து – எல்லா மக்களுக்கு இன்பம் தந்து
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் – எவருக்கும் அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து
தீது அகலக் பார்த்தலால் – தீமை அகற்றி நன்மை அளிக்க முற்படுதலால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி – தன்னை அணுகும் எதிரியை வென்று தன்னுள்ளாக்கி
ஏற்ற ரசத்தால் சதிருறறால் – மேல் கொண்ட நவரசப் பொருள்களால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் – கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

December 23, 2009

பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! காளமேகப் புலவர்

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 12:39 pm

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!!

பூசணிக்காயானது :

அடி நந்தி சேர்தலால் – அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் – உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு – ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு – அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் – வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! – பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக !!

சிவபெருமான் :

அடிநந்தி சேர்தலால் – திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் – திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு – ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு – சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.

November 16, 2009

விநாயகர் முருகன் சிவபெருமான் – காளமேகப் புலவர்

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 12:31 pm

சென்னி முக மாறுளதால் சேர்க்கரமுன் னாலுகையால்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் – மன்னுகுளக்
கண்ணுறுத லானும் கணபதியும் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே!!

விநாயகர்

சென்னி முகம் மாறுளதால் – தலையும் முகமும் உடலமைப்புக்கு மாறுபட்டுள்ளதால்
சேர்க்கரம் முன் னாலுகையால்- கரமான துதிக்கை முன் பக்கம் உள்ளதால்
இந்நிலத்திற் கோடொன்று உருக்கையால்- இவ்வுலகில் ஒற்றைக் கொம்பு உள்ளவராய் அமைந்தவராய்
மன்னு குளக் கண் உருதலானும் – நிலைபெற்ற நிவேதனமாக வெல்லம் உள்ளதாலும்
கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!! – கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!

முருகன்

சென்னி முகம் ஆறுளதால்- முடுயும் முகமும் ஆறு உள்ளதால்
சேர்க்கர முன்னாலுகையால்- கரங்களோ (முன் நாங்கு= பன்னிரண்டு) பன்னிரண்டு உள்ளதால்
இந்நிலத்திற் கோடு ஒன் றிருக்கையில்- இவ்வுலகில் குன்றமே பொருந்தியிருக்கும் இடமாக இருப்பதாலும்
மன்னு குளக் கண் உறுத லானும் – நிலைபெற்ற சரவணப் பொய்கையில் (குளத்தின் கண்) அவதரித்ததாலும்
கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!! – கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!

சிவபெருமான்

சென்னி முகம் ஆறுளதால் – சிரசினிடத்தே கங்கை ஆறு உள்ளதாலும்
சேர்க்கரமுன் னாலுகையால் – முன்புறத்தே சேறும் கைகள் நான்கு உள்ளதாலும்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையில் – இவ்வுலகில் மலைமுடியான கைலாச பர்வதம் என்ற மலையில் இருப்பதாலும்
மன்னுகுளக் கண்ணுறுத லானும் – நிலைபெற்ற நெற்றிக் கண்ணைப் பெற்றிருப்பதாலும்
கணபதியும் செவ்வேளும்எண்ணரனு நேரா வரே!! -கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!

October 22, 2009

ராம‌னின் த‌லைதீபாவ‌ளி!!…

எத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் ஆனாலும் தீபாவ‌ளியின் மேலுள்ள‌ ஈர்ப்பு ம‌ட்டும் என்றும் குறையாது. தீபாவ‌ளியை வ‌ர‌வேற்ற‌ ப‌திவிக‌ளை வாசித்த‌ என‌க்கு ப‌திவுக‌ளில் கிடைக்காத‌ இந்த‌ விச‌ய‌ம் ச‌ற்று ஆச்ச‌ர்ய‌மான‌து. தீபாவ‌ளி திருவிழாவான‌து ஜோதிக‌ளின் விழா என்றும் நர‌காசுர‌னை க‌ண்ன‌ண் வ‌த‌ம் செய்த‌ நாளாக‌வும், நாம் தீபாவ‌ளியை கொண்டுகிறோம் என்பீர்க‌ள், இல்லையா? குறைந்தப‌ட்ச‌ம், என்னிட‌ம் யாராவ‌து கேட்டால் நான் இதை தான் சொல்லியிருப்பேன். ராம‌ன் த‌ன் த‌லைதீபாவ‌ளியை காட்டில் கொண்டாடினானா இல்லை த‌ன் நாட்டில் கொண்டாடினான‌ என்ற துணுக்குக‌ளுக்கு, ராம‌வ‌தார‌துக்கு அடுத்த‌ அவ‌தார‌மே கிருஷ்ண‌வ‌தார‌ம் அத‌னால் ராம‌னின் கால‌த்தில் திபாவ‌ளி கிடையாது என்று எவ‌ரோ சிறு வ‌ய‌தில் சொல்ல‌க்கேட்டு அதை ந‌ம்பியே இருந்துவிட்டேன். நான் கேட்டு ரசித்த‌ புது த‌க‌வ‌ல். த‌ச‌ர‌த‌ரால் நாடுக‌ட‌த்த‌ப‌ட்ட‌ ராம‌ர், வ‌ன‌த்தில் 14வ‌ருட‌ங்க‌ளை க‌ழித்தார். அப்போது இல‌ங்க‌யின் ம‌ன்ன‌ன் ராவ‌ண‌ன் அவ‌ளை க‌ட‌த்த‌ ல‌க்ஷ்ம‌ண‌ன்,அனுமாரின் உத‌வியுட‌ம் ராவ‌ண‌னிட‌ம் யுத்த‌ம் செய்தார் ராம‌ர். த‌ன‌து விஷேச‌ த‌னுசினை க‌டைசியில் பிரோயோகிக்க‌ அது ராவ‌ணின் நெஞ்சை கிழித்து போரை முடிவுக்கு கொண்டுவ‌ந்த‌து. அர‌க்க‌ர்க‌ளின் ஆட்சி முடிந்த‌தில் உல‌க‌மே ச‌ந்தோச‌ப்ப‌ட்ட‌து. வான‌தேவ‌ர்கள் பூ தூவ‌, ம‌க்க‌ள் புத்தாடையுடுத்தி ம‌ல‌ர் செண்டோடு வ‌ழியெங்கும் நிறைந்திருக்க‌, இல்ல‌ங்க‌ள் எங்கும் தியா என‌ப்ப‌டும் எண்ணை விள‌க்கேற்றி ம‌கிழ்ச்சியுட‌ன் ராமர்,சீதை,ல‌க்ஷ்ம‌ண‌ன் ம‌ற்றும் ப‌டையின‌ரை வ‌ர‌வேற்ற‌ன‌ர். இதை தான் தீபாவ‌ளியாக‌ இன்றும் கொண்டாடுகிறோமாம். எது எப்ப‌டியோ!!.. தீபாவ‌ளி அன்று புத்தாடை த‌ரித்து, பல‌கார‌ங்க‌ளை வெளுத்துவாங்க‌வும், ப‌ட்டாசுக‌ளை வேடித்துத்தீர்க்க‌ ம‌கிழும் ம‌ன‌திற்கு கார‌ண‌ம் தேவ‌யா என்ன‌??

October 9, 2009

குடத்தில் அடைத்த பாம்பும் எள்ளும் ஒன்றே – காளமேகப் புலவர்

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 12:29 pm

ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற் பிண்ணாகுமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது

பாம்பு
ஆடிக் குடத்தடையும் – படமெடுத்து ஆடிய பின்னே குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் – ஆடும் போது ‘ஸ்’ என்று இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் – குடத்தை மூடித்திறந்தால் முகத்தை எட்டிக் காட்டும்
ஓடிமண்டைபற்றிப் பரபரெனும் – விரைந்து அதன் தலையைப் பற்றிக் கொண்டால் பரபரவென சுற்றிக் கொள்ளும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் – உலகில் பிளவு பட்ட நாக்கை உடையதாயிருக்கும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது – (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

எள்
ஆடிக் குடத்தடையும் – செக்கில் ஆடி எண்ணையாய் குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் – செக்கில் ஆடும் போதே இரைச்சல் போடும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் – மூடியைத் திறந்தால் எண்ணையைப் பார்ப்பவரின் முகத்தை தெளிவாகக் காட்டும்
ஓடிமண்டை பற்றிப் பரபரெனும் – விரைய மண்டையில் தேய்த்துக் கொண்டால் பரபரவென குளிர்ச்சி தரும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் – உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது – (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

Next Page »

Blog at WordPress.com.